Friday, March 27, 2020

மறுபிறவி இல்லாத சிவன் ஆலயம்

மறுபிறவி_இல்லாத_சிவன்_ஆலயம்





மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே இந்த திருக்கோவிலில் நுழைய முடியும்.

மற்ற யார் நினைத்தாலும் இந்த ஆலயத்திற்கு செல்ல முடியாது..

செல்ல முடியாத அளவுக்கு
அவ்வளவு தடைகள் வரும்.

வருடத்தின் 365நாட்களும் சூரிய ஒளி சிவன் மீது விழும் ஒரு அதிசய கோவில் இது.

மகாசித்தர் அகத்திய முனிவரே இந்த கோயிலுக்கு வர பலமுறை முயற்சித்தும் வர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வருடத்திறக்கு ஒருமுறை நாகர் (நல்லபாம்பு) இங்கு உள்ள சிவனுக்கு வில்வ பூஜை செய்து தனது தோலை சிவனுக்கு மாலையாக அணிவித்து செல்லும்..

கலியுகத்தில் நடக்கும் ஒரு அதிசயங்களில் இதுவும் ஒன்று..

இத்தல இறைவன் சிவனை பிரதோஷம் அன்று தரிசிப்பது ஆயிரம் மடங்கு புண்ணியம் தரும்.

ஸ்ரீ விஸ்வாத சுவாமி ஆலயம்.
ருத்ராக்ஷேவரேர் திருக்கோவில்.

#இடம்:-தேப்பெருமாநல்லூர்.கும்பகோணம்.
தஞ்சாவூர் மாவட்டம்.

ஓம் நமசிவாய.

""புல்லாகி, பூண்டாகி, புழுவாகி, மரமாகி
பல்விருகமாகி பறவையாய், பாம்பாய்
கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்
வல் அசுரராகி செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன்
மெய்யே உன் பொன்னடிகள்  கண்டின்று வீடுற்றேன் ''

 அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது ; ஆயினும் இந்த அறிய பிறவியை விடுத்து பிறவாமை  என்னும் பெரும் பேறையே நாடும் இறையடிகலார்களின் உள்ளம்.

அத்தகைய பேரின்ப நிலையை அருளும்  திருத்தலமாக  விளங்குகிறது கும்பகோணத்தில் இருந்து திருநாகேஸ்வரம் வழியாக 7  கி.மீ தொலைவில் உள்ள தேப்பெருமாநல்லூர்.

புராண காலத் தொடர்புடைய இத்தலத்தில் வேதாந்த நாயகி சமேத விஸ்வநாத சுவாமி அருள்புரிகிறார். இத்திருத்தலத்திற்கு சென்று இவரை வணங்குவோருக்கு மறுபிறவி இல்லை என்று ஐதிகம்.

#இத்திருக்கோவில்_மிகவும்_பழமையானது.

மற்ற கோவில்களுக்கும் இந்த கோவிலுக்கும் பல விதிகள் மாறுபட்டு காணப்படுகிறது .

ஆம்  இங்கு எழுந்தருளியிருக்கும் தெய்வங்கள் அனைத்தும் மாறுபட்ட கோலத்திலேயே காட்சி தருகின்றனர்.

இக் கோவிலுக்கு அவ்வளவு எளிதாக வந்து விட முடியாது விதிப்பயனே இந்த கோவிலுக்கு அழைத்து வரப்படும் ஆமாம் யாருக்கு மறுபிறவி இல்லையோ அவர்கள்தான் இக்கோவிலுக்கு வரமுடியும்; சுவாமியைத் தரிசிக்க முடியும்'' என்று சொல்கிறார் .

பக்தர்களுக்கு பிரதோஷகாலத்தில் மட்டும்  வேதாந்தநாயகி சமேத விஸ்வநாத சுவாமியைத் தரிசித்ததும்  பிரசாதமாக வில்வத்துடன் ருத்ராட்சம் ஒன்றும் கொடுக்கிறார்கள்.

வேதாந்த நாயகி அம்பாள்:

மகா மண்டபத்திற்குள் தெற்குத் திசை  நோக்கி தனிச் சந்நிதியில் வேதாந்த நாயகி அம்பாள்  வேறெங்கும் காணக்கிட்டாத காட்சியாக  வலது காலை எடுத்து வைத்து  முன்னோக்கி வந்து நம்முடன் பேசுவதுபோல் உதடுகள் குவிந்த நிலையில் அம்பாள்  தோற்றத்தில்  அருள்புரிகிறாள். இந்த அம்பாளுக்கு வெள்ளிக் கிழமைகளில் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம்.

அம்பாள் சன்னதியில் நான்கு வருடங்களுக்கு முன் தீபம் காலை 7 மணிமுதல் 9 மணி வரையில்  அணைவதும்  மீண்டும் தானாக எரிவதுமாக இருந்தது பெரும் அதிசய நிகழ்வாக இருந்தது தேப்பெருமானல்லூர் பொதுமக்கள் அனைவரும் திரண்டு வந்து அந்த காட்சியையும் அம்பாளையும் வழிபட்டு சென்றதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


 #பைரவர்:

அம்பாள் சந்நிதிக்கு அருகில் சாந்த பைரவர் என்று சிறிய உருவிலும் மகா பைரவர் என்று  பெரிய உருவிலும் ஒரே சந்நிதியில் இரண்டு பைரவர்கள் காட்சி தருகின்றனர். ஒரே கோவிலில் இரண்டு பைரவர் இருப்பதும் இங்கேதான்.

இந்த இரண்டு பைரவர் சந்நிதிக்குப் பக்கத்தில் சனி பகவான் காக்கை வாகனத்துடன், இடுப்புக்குக் கீழே இடக்கையை வைத்தபடி ஒய்யாரமாக மேற்கு நோக்கி இறைவனை பார்த்த வண்ணம் காட்சி தருகிறார்.

சனிபகவான்  ஏன் ஒய்யாரமாக நிற்கிறார் என்பதற்கு விளக்கமும் கொடுக்கிறார்கள்.

இறைவன் ஈசனை  சனி பகவான்
பிடிப்பதற்குரிய நேரம் நெருங்கி விட்டதால் இப்படி ஒய்யாரமாய் காட்சியளிக்கிறார்.

சனிபகவான்  அம்பாளிடம், என் பணி சரியாக செய்வேன்  ""நாளை காலை ஏழேகால் நாழிகைப் பொழுதில்  ஈசனைப் பிடிக்கப் போகிறேன்'' என்று சொன்னாராம் .

அதன் படி அடுத்தநாள்  ஈஸ்வரனைப் பிடிக்க சனிபகவான் வந்தாராம் . அப்போது அம்பாள் , ஈஸ்வரனை காப்பாற்ற  பக்கத்திலிருந்த அரச மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்ளச் சொன்னாள். ஈஸ்வரனும் அப்படியே செய்தார்.

சனி பகவான் அங்கு வந்து மரத்திற்கு அருகில் இருக்கும்  அம்பாளைப் பார்த்ததும்  ஈஸ்வரன் இங்கேதான்  இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டாராம்  அதன் பிறகு  அரச மரத்தைப் பார்த்த வண்ணம் அங்கேயே நின்றுவிட்டார். சனி பகவான் சொன்ன ஏழேகால் நாழிகை கழிந்ததும் அங்கிருந்து மெதுவாக நகர ஆரம்பித்தார் சனி பகவான். அப்போது அம்பாள்  சனி பகவானைப் பார்த்து,

"என்ன, ஈஸ்வரனைப் பிடிக்க முடியாமல் தோல்வி அடைந்து திரும்பிச் செல்கிறாயா?'' என்று கேட்டாள்.

சனி பகவான், "நான் வந்த வேலை வெற்றியுடன் முடிந்தது.

என் பார்வையில் ஈஸ்வரனே அரச மரத்தின் பின்புறம் ஒளிந்திருக்க ஏழேகால் நாழிகை நேரமே நான் அவரைப் பிடித்திருந்த  நேரம்'' அதுவும் உங்களுடைய ஒத்துழைப்பில்  என்று ஆணவத்துடன் சொன்னதுடன், சற்று ஒய்யாரமாக இடுப்பில் இடக்கை வைத்த வண்ணம் அம்பாள்முன் நின்றார். சனி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த ஈஸ்வரன் அரச மரத்தின் பின்புறத்திலிருந்து கோபத்தோடு வெளிப்பட்டு, மகாமந்திர பைரவர் அவதாரம் எடுத்து சனி பகவானை இரண்டாகக் கிழித்தார்.

இரண்டாகக் கிழிக்கப்பட்ட சனி பகவான் சிவபெருமானை நோக்கி, "ஈஸ்வரா! தாங்கள் வகுத்துக் கொடுத்த சட்டப்படிதான் நான் இயங்குகிறேன்.

நான் இல்லையேல் பூலோகவாசிகள் தங்கள் விருப்பப்படி மிகுந்த ஆணவத்துடன் செயல்படுவர். இதனால் உலகில் ஆணவக்காரர்களும் அக்கிரமம் செய்பவர்களும் பெருகி விடுவார்கள்.
எனவே, ஆணவத்தோடு நான் நடந்து கொண்டதற்காக என்னை மன்னித்து, மீண்டும் முன்புபோல் செயல்பட அருள்புரிய வேண்டும்'' என்று வேண்டினார். அவர் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் இரு கூறான உடலை ஒன்று சேர்த்து அருள்புரிந்தார். இவ்வாறு ஆணவம் நீங்கிய இந்த சனி பகவானை வணங்கினால் சனி தோஷங்கள் விலகும் என்பதும் இங்கு  ஐதீகம்.

மகாமந்திர பைரவராக உக்கிரமாகக் காட்சி தந்த ஈஸ்வரனுக்கு, நான்கு வேதங்களைச் சொல்லி அவர் கோபத்தைத் தணித்தாள் அம்பிகை.

அம்பாளின் அருள் பார்வையால் கோபம் தணிந்து மீண்டும் சாந்த சொரூபியானார் ஈஸ்வரன்.

இதனால் அம்பாள் வேதாந்த நாயகி என்று பெயர் பெற்றாள்.

அந்த வேளையில் நாரதர் அங்கு வந்தார். ""ஈஸ்வரா! நீங்கள் சனி பகவானை இரண்டாகக் கிழித்த பாவம் உங்களைப் பிடித்துக் கொண்டது.

இனிமேல் நீங்கள் விஸ்வரூபம் எடுக்க இயலாது.

எனவே நீங்கள் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களை ஒருசேர தரிசித்தால் அந்தப் பாவம் நீங்கும்'' என்று கூறினார்.

உடனே ஈஸ்வரன் பன்னிரண்டு ஜோதிர்லிங்க பரமேஸ்வரர்களையும் இத்திருத்தலத்திற்கு வரவழைத்தார்.

இதனைக் கண்டநாரதர், ""இவர்களில் ஒருவர் இங்கு வந்தாலும் எத்தகைய பாவங்களும் சாபங்களும் தோஷங்களும் நீங்கிவிடும். அப்படியிருக்க பன்னிரண்டு பேரும் வந்து இறங்கியதால் இது மிக அதிசயமான க்ஷேத்திரம்!'' என்று போற்றிப் புகழ்ந்தார்.

"பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களும் தரிசனம் கொடுத்த புண்ணிய தலம் இதுவென்பதால், ஏழேழு ஜென்மங் களில் புண்ணியம் செய்தவர்களும், மறுபிறவி இல்லாதவர்களும்தான் இங்கு வந்து தரிசிக்க முடியும்'' என்று நாரதர் சொன்னார்.

அதில் ஒரு ஜோதிர் லிங்கமான காசி விஸ்வநாதர், விசாலாட்சியுடன் அங்கேயே தங்கிவிட்டார்.

அந்தச் சந்நிதி மகாமண்டபத்தில் தென்கிழக்கு மூலையில் உள்ளது.

இத்தல இறைவனின் மகிமையை அறிந்த அகத்திய மாமுனிவர் ஸ்ரீவிசுவநாத சுவாமியைத் தரிசிக்க வந்தார்.

அகத்தியர் வருவதை அறிந்த சிவபெருமான், அகத்தி யருக்கு மறுபிறவி உண்டு என்பதால் அவரை அங்கு வராமல் தடுக்க எண்ணினார்.

அதனால் மகரந்த மகரிஷியை அழைத்து அகத்தியரின் வருகையைத் தடுக்குமாறு கூறினார்.

இறைவனின் கட்டளையை ஏற்ற மகரந்த மகரிஷி, அகத்தியர் மேற்கொண்டு நடக்க முடியாமல், மகரந்தப் பூக்களாக மாறி வழியை அடைத்து விட்டார்.

வழி மறித்த மகரந்த மலர்களை ஞான திருஷ்டியில் பார்த்த அகத்தியர், அந்த மலர்களில் மகரந்த மகரிஷி இருப்பதை அறிந்து, ""மகரிஷியே! நான் சுவாமியைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்; வழிவிடுங்கள்'' என்றார்.

மகரந்த மகரிஷி வழிவிட மறுக்கவே, கோபமடைந்த அகத்தியர்,
"பூ போன்று இருக்கும் உன் முகம் யாழி முகமாக மாறட்டும்'' என்று சாபமிட்டார்.

அகத்தியரின் சாபம் பலிக்க, யாழி முகத்துடன் காட்சி தந்த மகரிஷி, "மாமுனிவரே, இதனை நான் என் விருப்பப்படி செய்யவில்லை.

இறைவன் கட்டளைப்படிதான் தங்களை வழி மறித்தேன்.

உங்களுக்கு மறுபிறவி உள்ளதால் நீங்கள் இத்தல இறைவனைத் தரிசிக்க முடியாது'' என்று கூறி தன் சாபத்துக்கு விமோசனம் கேட்டார்.

சாந்தமடைந்த அகத்தியர், "மகரந்த ரிஷியே, நான் கொடுத்த சாபத்திலிருந்து விமோசனம் பெற, உலகத்தில் யாருமே பூஜை செய்யாத பொருளைக் கொண்டு இறைவனைப் பூஜை செய்தால், சாபம் நீங்கி மீண்டும் பழைய முகத்தினை அடைவீர்'' என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றார்.

உடனே மகரந்த ரிஷி தேப்பெருமாநல்லூர் ஸ்ரீ விஸ்வநாத சுவாமி ஆலயத்திற்கு வந்து யாழி (சிங்க) முகத்துடன் பூஜை செய்தார்.

இன்று ஒருவகை மலரால் பூஜை செய்தால் அடுத்த நாள் வேறு ஒரு மலரைக் கொண்டு பூஜை செய்தார்.

 இப்படியாக ஐம்பது வருடங்கள் பூஜை செய்தார்.

ஒரு நாள் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்போது அவர் கழுத்திலிருந்த ருத்ராட்ச மாலை அறுந்து சுவாமியின் சிரசில் (லிங்கத்தில்) விழுந்தது.

அப்போது இறைவன் ஜோதியாக ஜொலித்தார். இதனைக் கண்ட மகரந்த ரிஷி, ஒருமுக ருத்ராட்சத்திலிருந்து பதினான்கு முகம் கொண்ட ருத்ராட்சம் வரை சமர்ப்பித்து பூஜை செய்ய, சுவாமி ரிஷிக்குக் காட்சி கொடுத்தார்.

ரிஷி தன் யாழி முகம் மாறி சாப விமோசனம் அடைந்தார்.

அதனால்தான் இத்தல இறைவனுக்கு ருத்ராட்ச கவசம் சாற்றப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

இருபத்தியிரண்டாயிரம் ருத்ராட்ச மணிகளைக் கொண்டு ஆவுடை, பாணம், நாக படம் அமைத்து கவசமிடப்படுகிறது.

ருத்ராட்ச கவசத்தை பிரதோஷம், சிவராத்திரி, மாத சிவராத்திரி மற்றும் சிவனுக்குரிய சிறப்பு நாட்களில் அணிவிக்கிறார்கள். இதுபோன்ற ருத்ராட்ச கவசம் அணிந்த மேனி உள்ள இறைவனை எங்கும் தரிசிக்க முடியாது என்கிறார்கள்.

#நந்தி :

மகா மண்டபத்திலிருந்து கிழக்கு வாசல் வழியாக வெளியே வந்தால் நந்தியெம்பெருமான் காட்சி தருகிறார்.

இவருக்கு வலக்காது இல்லை.

பிரளய காலத்தில் உலகமே மூழ்கியபோது இத்தலம் மட்டும் தண்ணீரில் மூழ்காமல் வெளியே தெரிந்தது.

அப்போது பிரம்மா இத்தலத்தில் இறங்கிப் பார்த்தார். அங்கே விஸ்வநாத சுவாமி எழுந்தருளியிருப்பதைக் கண்டு வழிபட்டார். ஈசன் அப்போது ஜோதிர்லிங்கமாய் காட்சி கொடுத்தார்.

இந்த நிலையில் பிரளயத்தில் சிக்கிக் கொண்ட நந்தி இறைவனைத் தேடி இத்தலத்திற்கு வேகமாக வந்தது. அப்போது அது கால் சறுக்கி ஒரு பக்கமாக விழுந்துவிடவே, அதன் வலக்காது மடங்கி உள்நோக்கிச் சென்றுவிட்டது. இதனால் வருந்திய நந்தி இறைவனை நோக்க, நந்தியின் உள்ளப் போக்கை அறிந்த இறைவன், ""நந்தியே! வருந்தாதே. யார் ஒருவர் தங்கள் குறைகளை உன் வலக்காது இருந்த பக்கம் சொல்கிறார்களோ, அதனை நான் உடனே நிவர்த்தி செய்வேன்'' என்று ஆறுதல் கூறினார்.

அதன்படி, இந்த நந்தியின் வலக்காதுப் பக்கம் தங்கள் குறைகளைக் கூறினால் அது நிவர்த்தி ஆகிவிடுகிறது என்கிறார்கள்.

#ஸ்ரீதட்சிணாமூர்த்தி : #அன்னதானதக்ஷ்ணாமூர்த்தி

ஆலயத்தின் தெற்குப் பகுதியில் உள்ள சந்நிதியில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார்.

இவர் சீடர்கள் யாருமின்றி காளை வாகனத்தில் அமர்ந்து நிருதி திசையை நோக்கி அருள்புரிகிறார். இவரை அன்னதான தட்சிணாமூர்த்தி என்பர்.

இவரை தரிசித்தால் சாபங்கள் நீங்கும்; கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கலாம். இவருக்கு தினமும் பழைய சோறு (தண்ணீர் ஊற்றி வைத்த முதல் நாள் சோறு) படைக்கப்படுகிறது.
இவரை மனதார வழிபட்டால் பசித்த நேரத்தில் உணவு கிடைக்கும் என்கிறார் கோவில் குருக்கள்.

#ராகுகேது :

இத்திருக்கோவிலில் ராகு பகவானும் கேது பகவானும் ஒரே இடத்தில் அருள் புரிகின்றார்கள் . வேறு எங்கேயும் இப்படி இருவரும் ஒன்றாக இணைந்து காட்சி தருவது இல்லை. ஒரே இடத்தில் இருவரையும் வணங்கும் படி ஒற்றுமையோடு அருள்கின்றனர்.

#நவக்கிரகம் :

நவகிரகங்கள் ஒவ்வொன்று மாறு திசையில் இருப்பதும் இங்கு தான்.

#கர்ப்பகிரகம் :

இக்கோவிலின் கர்ப்பகிரகம் மட்டும் தேன் கலந்த சுண்ணாம்பால் கட்டப்பட்டது என்று வரலாறு சொல்கிறது.

#தீர்த்தம்:

இத்திருக்கோவிலின் தலமரம் வன்னி. தலத் தீர்த்தமான பிரம்ம தீர்த்தம் கோவிலின் கிழக்குப் பகுதியில் உள்ளது.

தினமும் சூரிய பகவான் வழிபடுகிறார்:

தினமும் காலையில் சூரிய பகவான் தன் ஒளிக்கதிர்களை சிவலிங்கத்தின்மீது படரச் செய்து வழிபடுகிறார். அதற்குப் பின்தான் காலை ஏழு மணி அளவில் கோவில் திறக்கப்படுகிறது.

#நாகம்_வந்து_வழிபடுகிறது :

சூரிய கிரகணத்தின்போது ஒரு பெரிய நாகம் எங்கிருந்தோ வந்து தலமரமான வில்வத்தில் ஏறி, வில்வதளத்தைப் பறித்து வாயில் கவ்விக் கொண்டு, கிழக்கு வாசல் வழியாக நுழைந்து சிவலிங்கத்தின்மீது ஏறி வில்வதளத்தை வைத்தபின், கீழே இறங்கிப் படம் எடுத்து வழிபட்டபின், வந்த வழியே சென்று மறைந்துவிடுமாம்.

#கோவில்_முகவரி:
1/15,அக்ரஹாரம் ,
தேபெருமாநல்லூர்  - (po)
தேபெருமாநல்லூர் - (Tk),
கும்பகோணம் - 612 206.

இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லா உயிர்களும் இன்புற்று எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வணங்குகிறேன்...

ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி ஏகம்பத்துறை எந்தாய் போற்றி பாகம்பெண்ணுரு ஆனாய் போற்றி அண்ணாமலை எம் அண்ணா போற்றி எங்கும் பரவி எதிலும் நிறைந்த பரம்பொருளே எம்மை ஆளும் பார்வதி பரமேஷ்வரா போற்றி காவாய் கனக திரளே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி

ஓம் பதிணென் சித்தர்கள் போற்றி

ஓம் குருவின் திருவடி சரணம்

ஓம் ஸ்ரீபஹூளாதேவி சமேத ஸ்ரீகாகபுஜண்டர் சித்தசுவாமியே போற்றி போற்றி

ஓம் சிவசிவ சிவயநம ஓம் ஹர ஹர சம்போ மகாதேவா சதா சாம்பசிவா ஓம் ருத்ராகேஸ்வரா...

"ஓம் வேதாந்தநாயகி சமேத விஸ்நாதாய நமசிவாய ருத்ராகேஸ்வராய நமஹ"

நினைப்பதும் நீ நினைக்க வைப்பதும் நீ நடப்பதும் நீ நடக்க வைப்பதும் நீ சர்வமும் நீ சகலமும் நீயே என் அம்மையப்பா மரணத்திலும் மகேஸ்வரா உன்னை மனதார நினைக்கின்ற மனம் வேண்டும் நீயே நானாக நானே நீயாக எல்லாவுமாய் இருப்பவனே எம்மை ஆளும் பார்வதி பரமேஷ்வரா உம் திருவடி சரணம்! சரணம்!!
சுவாமி : சிவன்.
தலச்சிறப்பு : இத்தல சிவனை சேவித்தால் பக்தர்கள் முக்திஅடைவர். இதனால் மறுபிறவி இருக்காது என்பது ஐதீகம். இத்தலத்தில்  உள்ளே சென்றால் முதலில் விநாயகரை தரிசிக்கலாம்.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.
கோவில் முகவரி : தேபெருமாநல்லூர் சிவன் கோவில்,
தேபெருமாநல்லூர், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

ரக்க்ஷீதாவின் பொக்கிஷங்கள்